Saturday, December 01, 2012

குர்ஆனில் விஞ்ஞானம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.
கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்- (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்- இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்- அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்- பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்- பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்- பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெருவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பால் எவ்வாறு உற்பத்தியாகிறது
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது- அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உறுமாகிறது.
அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.
 இரு கடல்களுக்கிடையே தடுப்பு
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்- ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது- மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்- அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா- ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது- மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்- மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது- அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியருப்பதாகக் கூறுகிறது.
இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
அனைத்திலும் ஜோடி
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்- இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்- அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3
'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்- இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்- மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்- இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்' (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49
திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.
தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.
தூவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெருவெடிப்பு கொள்கை
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30
 இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.
திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
சூரியனும் கோள்களும்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்- நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள் பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான் இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான்- இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன- அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்- பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்- இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன- அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்- அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது- இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது- இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்- அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்- இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்- சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது- (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்- மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5
சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.
பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.
இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது- சூரியனையும் சுற்றுகிறது- தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.
பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.
ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல- ஓடிக் கொண்டே இருக்கின்றது- அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.
இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.
இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்தையல்ல- கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.
ஓரங்களில் குறையும் பூமி
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்- அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41
எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்- நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44
நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்' (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது- அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு- நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

Thursday, November 01, 2012

இஸ்திகாராத் தொழுகையின் சிறப்பு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

உலகப் பிரச்சினைகளில் தெளிவு பெற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையும் துஆவும்.

இஸ்திஃகாராவின் சிறப்பு
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! யா அல்லாஹ்! அருமை நாயகம் முஹம்மது ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது நித்திய சாந்தியையும் சமாதானத்தையும் இறக்கியருள்வாயாக!

முஸ்லிம்களுக்கு அன்றாடம் தீன், துன்யா சம்பந்தமான எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன. அவைகளை மார்க்கத்தில் சொல்லப்பட்ட முறைகளில் நிறைவேற்றும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது ஒரு மேலான சேவையாக இருக்கும். ஏனெனில் அடியான் தன்னுடைய தேவைகளை தீனில் சொல்லப்பட்ட முறையில் அடைந்து கொள்ளும்போது அது ஒரு பக்கம் இபாதத் ஆகி மறுமைக்கும் நற்பலன் அளிப்பதுடன் உலகிலேயே அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளைப் பெற்று தரக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது.

ஆனால் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையைப் பார்க்கையில் அவர்கள் தமது முக்கிய பிரச்சினைகளை தமது நாட்டங்களை நிறைவேற்ற தீனுக்குப் புறம்பான தவறான வழிகளை மேற்கொண்டு படைத்துப் பரிபாலிக்கும் போஷகனான அல்லாஹ்வை மறந்து யார் யாரின் கால்களையோ படித்து எவர் எவருடைய வாசல்களிலோ காத்துக்கிடந்து தீனை மறந்து நேர்வழியைத் துறந்து மகத்தான தவற்றில் வீழ்ந்துவிடுகின்றனர்.

ஆனால் அருமை நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களோ உலக மாந்தர் அனைவருக்கும் தீன் துன்யா இரண்டிற்கும் வெற்றிக்கான வழியைக் காட்டித் தந்துள்ளார்கள். உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களின் சொல், செயல், நமக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. நமது தேவைகளை அடைய, கஷ்டங்கள் அகல, கவலைகள் நீங்க, கடன்கள் தீர, தடுமாற்றமும் குழப்பமும் தீர்த்து வைக்க மேலான வழிமுறைகள் அனைத்தையும் அன்னார் நமக்குக் காற்றுத் தந்துள்ளார்கள்.
இன்று நாம் பின்னடைந்து தோல்வி அடைவதற்குரிய காரணம் அவர்களின் வழிமுறையை அறியாது இருப்பது, அல்லது அறிந்திருந்தாலும் அமல் செய்யாமல் மறந்திருப்பதுமே ஆகும்.

நமக்கு அன்றாடம் உண்டாகும் பிரச்சினைகளுக்கான சுன்னத்தான வழிமுறை இன்னது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து, அறிந்தவர் மற்றவர்களுக்கும் எத்திவைத்துச் செயல்பட வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

ஆல்லாஹு தாஆலா நம் அனைவருக்கும் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை வாழ்க்கையின் சகல துறைகளிலும் கடைப்பிடித்து ஒழுகி ஈருலகிலும் வெற்றி அடையும் பாக்கியசாலிகளாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

இஸ்திகாராத் தொழுகையின் விளக்கம்

ஒருவர் ஏதேனுமொரு முக்கியமான காரியத்தைச் செய்ய நாடும்போது அதைச் செய்யலாமா அல்லது விட்டுவிடலாமா என்று மனத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் ஏற்படும் அதில் தன்னால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர முடியாத கட்டத்தில் அவர் அல்லாஹு தஆலாவின் பக்கம் தம் கவனம் முழுவதையும் செலுத்திப் பணிவுடனும் மனத் தெளிவுடனும் அக்காரியத்தில் அல்லாஹ்வின் கிருபை நிறைந்த வழிகாட்டுதலையும் நல்லதொரு முடிவையும் கொடுக்குமாறு அவனைத் தொழுது அவனிடமே இறைஞ்சவேண்டும். இதற்கு இஸ்திகாரா (நன்மையைத் தேடி இறைஞ்சுதல்) என்று பொருள்.

மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட காரியங்களில் இஸ்திகாரா செய்வது தேவையில்லை.

இஸ்திகாரா தெழுகையின் சிறப்பு

இஸ்திகாரா என்பது நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின உயர்வான போதனையிலுள்ள ஒரு சிறப்பான அம்சமாகும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட ஒரு பெரும்பேறு ஆகும். கிடைத்தற்கு அரிதான இம்மாபெரும் பொக்கிஷத்தினால் பல கோடி முஸ்லிம்கள் காலங் காலாமாகப் பல நன்மைகளை அடைந்து வந்திருக்கின்றனர்.

ஹஜ்ரத் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு எவ்வாரு திருக்குர் ஆனின் சூராக்களைப் போதித்து வந்தார்களோ அவ்வாறே இஸ்திகாராவையும் மிக முக்கியத்துவத்துடன் போதித்தார்கள். மேலும் ஏதேனுமொரு மிக முக்கியமான காரியம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்போது இஸ்திகாரா நிய்யத்துடன் இரண்டு ரக்அத் தொழுது முடிவில் துஆ ஓதிகொள்ளுமாறு கூறவார்கள்”.

மற்றுமொறு ஹதீதில் இஸ்திகாரா செய்யக்கூடியவர்கள் தோல்வியடைவதில்லையென்றும் மனச்சஞ்சலமும் துயரமும் அடைய மாட்டார்களென்றும் மாறாக சிறப்பான நன்மைகளும் கண்ணியமான அனுபவமும் நல்ல முடிவும் அடையப்பெறுவார்கள் என்றும் வருகிறது. மேலும் அல்லாஹ்விடம் பரஞ்சாட்டி தனது காரியத்தில் ஆலோசனையைக் கேட்டால் வல்ல நாயன் தனது சம்பூர்ண அறிவு ஞானத்தாலும் தனது பெருங்கிருபையாலும் நிச்சயமாக நல்லதொரு முடிவைத் தந்தருளுவான். அல்லாஹ் நாடுவதேயன்றி வேறெதுவும் நடக்காது.

இந்த விதமாக தன்னிடம் இஸ்திகாரா செய்பவருக்கு நிச்சயம் நன்மையையே நாடுவான். இதனால் வெளிப்படையாக உடனே கைமேல் பலன் ஏற்படாவிட்டாலும் அந்தரங்கத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாவது நிச்சயம். மனிதர்களின் நற்பாக்கியம் இஸ்திகாராவில் அமைந்துள்ளது. அவர்களின் துர்பாக்கியம் இஸ்திகாராவைப் புறக்கணிப்பதில் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்திகாரா செய்யும் முன்பாக சுன்னத்தான முறைகளப்பேணி உளு செய்து கொண்டு இரண்டு ரக்அத் இஸ்திகாரத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத்துச் செய்து தக்பீர் கட்டி முதல் ரக்அத்தில் வஜ்ஜஹத்து தனாவுக்குப் பின் அல்ஹம்தும் குல்யா அய்யுஹல் காபிரூன் சூராவும் ஓதி இரண்டாம் ரக்அத்தில் அல்ஹம்தும் குல்ஹு வல்லாஹு சூராவும் ஓதித் தொழுது முடித்த பின் கீழ்க்கண்ட துஆவை ஓதி அல்லாஹ்விடம் துஆ இறைஞ்ச வேண்டும்.

இஸ்திகாரா துஆ



































துஆவின்பொருள்
யா அல்லாஹ்! உன் அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையைத் தேடுகிறேன். உன்னுடைய சக்தியின் பொருட்டால் உன்னிடம் நான் சக்தியைத் தேடுகிறேன். உன்னுடைய மகத்தான கருணையை உன்னிடம் நான் வேண்டுகிறேன். நிச்சயமாக நீ (அனைத்தின் மீதும்) சக்தி பெற்றவன். நான் (எவ்வேலையைச் செய்வதற்கும்) சக்தியற்றவன். நீ (அனைத்ததையும்) அறிந்தவன். நான் (எதனையும்) அறியாதவன். நீ மறைவானவற்றை எல்லாம் அறிந்தவன். யா அல்லாஹ்! இந்த காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் என்னுடைய மறுமைக்கும் நல்லதென்று நீ அறிந்திருந்தால் அதைச் செய்ய எனக்கு நீ சக்தியளித்து அதனை எனக்கு இலேசாக்கி வைப்பாயாக! மேலும் இந்தக் காரியத்தில் எனக்கு (பரக்கத்) அபிவிருத்தியையும் தந்தருள்வாயாக! இந்தக் காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் மறுமைக்கும் தீமையானது என நீ அறிந்திருந்தால் என்னை விட்டும் இக் காரியத்தை நீ திருப்பி விடுவாயாக! இக் காரியத்தை விட்டு என்னையும் நீ திருப்பிவிடுவாயாக! எனக்கு எது நல்லதோ அது எங்கிருப்பினும் அதைச் செய்யச் சத்தியைக் கொடுத்து என்னை அதன் மீது பொருந்திக் கொண்டவனாக ஆக்குவாயாக!

(நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி சுன்னத்தான முறையில் நாம் நாடிய காரியங்களை அடைந்துகொள்ள அல்லாஹ் நம்மனைவருக்கும் நற்கிருபை செய்வானாக)

* இந்தக்காரியத்தை என்று வரக்கூடிய இரு இடங்களிலும் தான் நாடியுள்ள காரியத்தைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும்.