Monday, March 19, 2012

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது மிக பெரிய தொடராக போகும் அத்தனை விவரங்கள் அடங்கியது அவர்களின் வாழ்க்கை வரலாறு .இது அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு.. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.


சிறு வயதிலேயே சிறந்த அறிவாளியாகவும்,நல்ல நினைவாற்றல் உள்ளவராகவும் இருந்தார்கள் .. அன்னையவர்களின் திருமணம் நடந்த போது அவர்களின் வயது '6' திருமணம் என்றால் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவம்..வயதின் காரணமாக அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.


அவர்களின் '9'வயதில் தான் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது .அந்த அறைக்கு கதவு துணியால் மூடப்பட்டிருந்தது.


அந்த அறையில் உலக வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பர பொருள்கள் கிடையாது.மறுமை வாழ்வுக்கான பொருள்கள் மட்டுமே இருந்தது . அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.யார் இல்லை என்று வந்தாலும் தன்னிடம் இருப்பதை. தனக்கு இல்லை என்றாலும் கூட கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.அடுத்தவர்களின் துன்பத்தை கண்டால் கண்ணீர் சிந்தக் கூடியவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவிகளுக்கு இல்லாத பெருமை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உண்டு.அவர்கள் மட்டும் தான் கன்னி பெண்ணாக மணம் முடிக்கப் பட்டவர்கள்.


மிகுந்த அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருந்தார்கள் .இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.அன்னையின் மீது மிகுந்தஅன்பும்,பெருமதிப்பும், கொண்டிருந்தார்கள்.எந்த அளவுக்கு என்றால்.எனக்கு முன்னால் உனக்கு மரணம் நேரும் என்றால் நானே உன்னை குளியாட்டி ,கஃபன் இட்டு மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன் என்று சொல்லும் அளவுக்கு... இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு உலகிலேயே மிக பிடித்த பெண் யார் என கேட்டதும் ஆயிஷா (ரலி) என்றார்கள் ஆண் எனக் கேட்டதும் அபுபக்கர் சித்திக் (ரலி) என மறுமொழி பகிர்ந்தார்கள் .ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி இருப்பது .அவர்களின் தியாகத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு'19' வயது ஆகும் போது சஹாபாக்களில் மறைந்து இருந்த முனாபிக்கான சஹாபாக்களின் மூலமாக அவர்களின் மீது அவதூறு கூறப்பட்டது. அவர்கள் படும் வேதனையின் காரணமாக அவர் பொருட்டு ஏக கருணையாளனாகிய அல்லாஹ் தாஆலாவால் இறக்கி வைக்கப்பட்டது தான் அல்குரானின் (24:11,24:12,24:13,24:14,24:15,24:16,24:17,24:18,24:19,24:20,24:21)வசனங்கள். இந்த வரலாற்று சம்பவம் உஃபுக் என்று அழைக்கப் படுகிறது .



மேலும் ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் பயணம் மேற் கொள்ளும் போது அவர்களின் கழுத்து மாலை காணாமல் போய்விட்டது அதை தேடும் பொருட்டு அனைவரும் அந்த இடத்திலேயே தங்க நேரிட்டது .தொழுகை நேரம் வந்ததும் தொழுவதற்கு தண்ணீர் தேடினால் அங்கு தண்ணீர் இல்லை .அனைவருக்கும் இவர் பொருட்டு தானே அனைத்தும் என மனங்கள் சுணங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் ஏக கருணையாளனாகிய அல்லாஹ் தாஆலாவால் தயம்மம் குறித்தான(4:43) வசனங்கள் இறக்கி அருளப் பட்டது.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்த காரணத்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு அவர்களுக்கு தோழமையோடு கூடிய நல்ல புரிந்துணர்வு இருந்தது ..இவர்களின் வயது காரணமாக இவர்களின் வேடிக்கை பேச்சுக்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் புன்னைகையோடு ஈடு கொடுப்பது உண்டு ..கணவரோடு மிகுந்த அன்போடு ,அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய பாக்கியசாலியாக இருந்தார்கள்.


இயல்பாகவே நல்ல அறிவாற்றலும் ,தெளிவான ஞானமும் பெற்று இருந்தாலும், தன் தகப்பனாரின் நல்ல வழிகாட்டுதல் மூலமாகவும் ,சிறு வயதில் இருந்தே இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த காரணத்தாலும் ,தன் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ,ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.


இன்னும் தனிச்சிறப்பாக ஆயிரக்கணக்கான நபி மொழிகளுக்கு சொந்தக்காரர்களின் முதல் ஏழு நபித் தோழர்களின் வரிசையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை (2210 ஹதீஸ்கள்) ஆகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தான் நிகழ்ந்தது .அது குறித்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் மரணித்தது கண்டு நான் பெருமைப்படுகின்றேன், அதனைப் பாக்கியமாகவும் கருதுகின்றேன் என்று பெருமையோடு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.


அன்னைஆயிஷா (ரலி)அவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு. தனது 66 ம் வயதில் ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.மதீனாவில் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவர்களுக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.


அன்னைஆயிஷா (ரலி) அவர்களின் வாழ்வு ,அவர்கள் வாழ்ந்த காலத்திலும் ,நாம் வாழுகின்ற காலத்திலும் இனி மறுமை நாள் வரை வர போகும் அனைத்து பெண்களுக்கும் ஒரு வாழ்வியல் வழிகாட்டியாக உள்ளது அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின்அளவிட முடியாத ஈமான்,கணவர் மீது வைத்திருந்த அளவற்ற அன்பு ,ஈகை குணம்,புத்தி கூர்மை ,நேர்மை ,மார்க்கம் பற்றிய தெளிவு ,துணிவு,வீரம் ,சமயோசித அறிவு ஆகிய அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளும் பாடமாக உள்ளது . எனவே, அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்கம் நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக.ஆமீன்.